சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சென்னை வாலிபருக்கு 2 மாதம் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சென்னையை சேர்ந்த வாலிபருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-01-14 21:45 GMT

திருவாரூர்,

சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன் ராஜா (வயது25). கடந்த ஆண்டு (2018) ஜூலை மாதம் 23–ந் தேதி, திருவாரூர் வந்த ராஜா, திருவாரூர் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். இதுபற்றி திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார், ‘‘போக்சோ’’ சட்டத்தில் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பக்கிரிசாமி தீர்ப்பு கூறினார். அதில் ராஜாவுக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, ஏட்டு புஷ்பா ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்