காட்பாடி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி தண்டவாளத்தை கடந்த பெண்ணும் அடிபட்டு சாவு

காட்பாடி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தை கடந்த பெண்ணும் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

Update: 2019-01-14 22:15 GMT
ஜோலார்பேட்டை,

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள யாக்கோபுரம் பழவூர் கிராமம் நெடுவிளை தெருவை சேர்ந்தவர் ராஜமணி (வயது 43), வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து ஆனவர். பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக ராஜமணி தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார். அதற்காக நேற்று காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் ரெயிலில் பயணம் செய்தார்.

அந்த ரெயில் காட்பாடியை அடுத்த கிளித்தான்பட்டறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, ராஜமணி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து, அதே ரெயில் சக்கரத்தில் சிக்கி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதே போல், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு இந்திரா நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது மனைவி ஜெயலட்சுமி (60). இவர், நேற்று வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துகள் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்