விளாத்திகுளத்தில் பரிதாபம் கண்மாயில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் சாவு

விளாத்திகுளத்தில் கண்மாயில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் உயிரிழந்தார்.

Update: 2019-01-16 22:00 GMT

விளாத்திகுளம், 

விளாத்திகுளத்தில் கண்மாயில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் உயிரிழந்தார்.

பிளஸ்–2 மாணவர்

விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் பொன் செல்வம் (வயது 18). இவர் விளாத்திகுளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார்.

இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்கள் 2 பேருடன், விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் உள்ள பெரிய கண்மாயில் குளிக்க சென்றார். அப்போது கண்மாயின் ஆழமான பகுதியில் பொன் செல்வம் எதிர்பாராதவிதமாக மூழ்கினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 2 பேரும் ஓடிச் சென்று, பொன் செல்வத்தின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கண்மாயில் இறங்கி தேடினர். அப்போது கண்மாயில் மூழ்கி இறந்த பொன் செல்வத்தின் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கண்மாயில் மூழ்கி இறந்த பொன் செல்வத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாபம்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்மாயில் மூழ்கி இறந்த பொன் செல்வத்தின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. கண்மாயில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்