மகனின் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் பெண் தற்கொலை

மகனின் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-01-16 23:00 GMT
தேனி,

தேனி சிவாஜி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர், வீடுகள் விற்பனை செய்யும் முகவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வாணி (46). இவர்களுடைய மகன் முத்துராமனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணின் குடும்பத்தினரை தனக்கு பிடிக்கவில்லை என்றும், இந்த திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் வாணி தனது கணவர் மற்றும் மகனிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இருப்பினும் நிச்சயதார்த்தம் நடத்தி முடித்தனர். இதில் விருப்பம் இல்லாததால் வாணி தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அவரை கண்ணன் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாணி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்