சூளகிரி அருகே 200 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா - ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

சூளகிரி அருகே 200 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Update: 2019-01-16 23:25 GMT
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது ஏனுசோனை கிராமம். இந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 200 -க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டிருந்தன.

இதையொட்டி காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மைதானத்தில் காளைகளை அவிழ்த்து விட்டு எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது அவைகள் துள்ளிக் குதித்து ஓடின. சீறிப் பாய்ந்து சென்ற காளைகளை, மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் விரட்டி சென்று, காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த தட்டிகளை பறிக்க முயன்றனர்.

அப்போது சிலர் கீழே விழுந்து லேசான காயமடைந்தனர். இந்த எருது விடும் விழாவை காண ஏனுசோனை, சூளகிரி, கெட்டூர், மாதர்சனபள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் திரண்டு வந்திருந்தனர். விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்