சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2019-01-18 22:15 GMT
தேனி,

கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இது, இயற்கையும், ஆன்மிகமும் சார்ந்த சுற்றுலா இடமாக திகழ்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து இந்த அருவிக்கு தண்ணீர் வருகிறது.

முன்பு ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தூவானம் அணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தண்ணீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியை தொடர்ந்து கோடை காலத்தில் வன விலங்குகள், நீர்வாழ் தாவரங்களின் நலன் கருதி குறைந்தபட்ச தண்ணீர் திறக்க அனுமதி பெறப்பட்டது.

அதன்படி கோடை காலத்திலும் குறைந்த அளவு தண்ணீராவது தூவானம் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரையில் அருவியில் நீர்வரத்து அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் ஒவ்வொரு நபராக சென்று அருவியில் குளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தூவானம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதத்திலேயே இந்த நிலைமை என்றால், கோடை காலத்தில் நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் உள்ளது. எனவே, அருவிக்கு குறைந்தபட்ச அளவு தண்ணீராவது அணையில் இருந்து தொடர்ந்து திறந்து விட வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்