மது குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளி வெட்டிக்கொலை - தம்பி கைது

மது குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-18 22:15 GMT
தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே மது குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது மகன்கள் மாதேஸ் (வயது 28), கிருஷ்ணா (21). இதில் மாதேஸ் கூலி வேலை செய்து வந்தார். கிருஷ்ணா வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

இதன் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடிப்பதற்காக கிருஷ்ணா, தனது அண்ணன் மாதேசிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மாதேஸ் பணம் கொடுக்க மறுத்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணா வீட்டில் இருந்த அரிவாளால் மாதேசை சரமாரியாக வெட்டினார். இதில் உடல் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் போலீசார் மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணாவை கைது செய்தனர். மது குடிக்க பணம் தர மறுத்ததால் அண்ணனை, தம்பியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்