மினிலாரி–மொபட் மோதல்: கணவன், மனைவி பலி திட்டக்குடி அருகே பரிதாபம்

திட்டக்குடி அருகே மினிலாரி–மொபட் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியானார்கள்.

Update: 2019-01-18 22:30 GMT

திட்டக்குடி,

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன்(52), சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பொன்னி(48). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகராஜன் சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில் நாகராஜனும், பொன்னியும் நேற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குமாரை கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வ கோவிலான பூமாலையப்பர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மொபட்டில் வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பெருமுளை–சிறுமுளை சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த மினிலாரி தாறுமாறாக வந்து நாகராஜன் மொபட் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த நாகராஜன் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வெளிநாடு செல்ல இருந்த நிலையில் இந்த விபத்து நடந்ததால், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்