7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி அரசு சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி அரசு சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கினர். இதனால் வகுப்புகள் நடைபெறவில்லை.

Update: 2019-01-18 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் சொசைட்டி கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. அவர்கள் தங்களுக்கும் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இதனை தொடர்ந்து புதுவையில் கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை புறக்கணிப்பு போராட்டத்தினை தொடங்கினர். சொசைட்டியின் கீழ் இயங்கும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, காலாப்பட்டு அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 18 கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து தங்கள் கல்லூரிகளுக்கு முன்பு தனித்தனியாக போராட்டம் நடத்தினர். இதனால் சொசைட்டி கல்லூரிகளில் நேற்று வகுப்புகள் நடைபெறவில்லை. மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்