மினி வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: தாய், மகள் பரிதாப சாவு - சேந்தமங்கலம் அருகே சோகம்

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மினி வேன் மீது மோதியதில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-01-18 22:45 GMT
சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் சறுக்கி சென்று, மினி வேன் மீது மோதியதில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், வளப்பூர்நாடு, பள்ளத்துவளவு கிராமத்தை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 35). இவர் அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சசிகலா(29). இவர்களுடைய மகள் இந்துஜா(12). இவள் நாமக்கல் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

மகளின் படிப்புக்காக, நாமக்கல்லில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த உமாசங்கர், பொங்கல் பண்டிகைக்காக கொல்லிமலை சென்றுவிட்டு, நேற்று மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளுடன் நாமக்கல் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சேந்தமங்கலம் அருகே வெண்டாங்கி என்ற இடத்தில் அவர்கள் வரும் வரும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் சறுக்கி கொண்டு சென்றது. அப்போது எதிரில் வந்த மினி வேன் அவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில், சசிகலா சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடைய மகள் இந்துஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாள். டிரைவர் உமாசங்கர் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்