பிரதமர் மோடி, வெறும் பேச்சால் வெற்றி பெற முடியாது - பரமேஸ்வர் பேச்சு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, வெறும் பேச்சால் வெற்றி பெற முடியாது என்று பரமேஸ்வர் கூறினார்.

Update: 2019-01-18 23:41 GMT
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவராக எச்.கே.பட்டீல் பதவி ஏற்பு விழா பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்துகொண்டு பேசியதாவது:-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விைல வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் மத்திய அரசு, பெட்ரோல்-டீசல் விலை தொடந்து உயர்த்தியது. அவற்றின் மீதான வரியும் உயர்த்தப்பட்டது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயனை, மத்திய அரசு எடுத்துக்கொண்டது.

இதனால் ரூ.1.40 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்த பணத்தை பிரதமர் ேமாடி என்ன செய்தாா்?. எந்த வங்கியில் அந்த பணத்தை வைத்துள்ளார் என்பதை சொல்ல வேண்டும்.

நாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு விரோதமான கொள்கையை பின்பற்றுகிறார். பொய் வாக்குறுதிகளை கொடுத்து மோடி பிரதமரானார். அது தற்போது பகிரங்கமாகியுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, வெறும் பேச்சால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஒரு முறை மக்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டனர்.

காங்கிரஸ் பிரசார குழு தலைவராக எச்.கே.பட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளி கிடையாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதியிலும் வெற்றி பெற்று, ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். இந்த நோக்கத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

மேலும் செய்திகள்