குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் சிறுவன் பலி கர்ப்பிணி படுகாயம்

குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். கர்ப்பிணி படுகாயமடைந்தார்.

Update: 2019-01-19 00:04 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 29). இவரது மனைவி சவுந்தர்யா (22), மகன் மதிஸ்வரன் (2). இவர்கள் 3 பேரும் நேற்று குளித்தலையில் இருந்து கவுண்டன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை மோட்டார் சைக் கிளில் சரவணக்குமார் முந்தி செல்ல முயன்றார். அப்போது திடீரென டிரைவர் டிராக் டரை திருப்பினார். இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மதிஸ்வரன், சவுந்தர்யா ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த சவுந்தர்யா, மதிஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதிஸ்வரன் பரிதாபமாக இறந்தான்.

பின்னர் சவுந்தர்யாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த சவுந்தர்யா கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்