பட்டாபிராமில் 4 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

பட்டாபிராமில் வீட்டின் வளாகத்தில் நிறுத்தி இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள், 3 சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

Update: 2019-01-19 22:15 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை (வயது 67). இவரது மற்றொரு வீடு பட்டாபிராம் பாரதியார் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது. இந்த வீட்டில் சுப்பிரமணி (47), கணேசன் (45), கனகராஜ் (46), ரவி (45), யாபேஸ் (37) ஆகிய 5 பேர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்களது 4 மோட்டார் சைக்கிள்கள், 3 சைக்கிள்களை வீட்டின் வளாகத்தில் நிறுத்தி இருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் சுப்பிரமணியின் மகன் கார்த்திகேயன் (27) என்பவர் கழிவறை செல்வதற்காக வெளியே எழுந்து வந்தார்.

அப்போது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள், 3 சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள், வாகனங்களுக்கு தீ வைத்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்