விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2019-01-19 22:45 GMT
கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. அதில் 2 தினங்களாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று அதிகாலையில் ஏரிச்சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 6 டிகிரி பதிவானது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் வார விடுமுறையை கொண்டாடுவதற்காக கடந்த சில தினங்களாக கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அவர்களில் பலர் ஏரியில் படகு சவாரி செய்தனர். சிறுவர்-சிறுமிகள் உள்பட பலர் ஏரியைச் சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரிகளில் உற்சாகமாக ஈடுபட்டனர். இதனால் ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று பகல் நேரத்தில் அதிக வெப்பம் நிலவினாலும், மாலை நேரத்தில் கடும் குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி கடை வீதிகளில் நடமாடினர். மேலும் பலர் குளிரை தாங்க முடியாமல் அறைகளில் முடங்கினர். சில இடங்களில் குளிரின் தாக்கத்தை குறைப்பதற்கு பலர் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

மேலும் செய்திகள்