கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்: காதலனுடன் சேர்ந்து கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கிய பெண் போலீசார் வலைவீச்சு

கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பெண், காதலனுடன் சேர்ந்து கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-01-20 22:30 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரையை சேர்ந்தவர் ஹாஜா நவாஸ் (வயது 53). இவர், வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சிராவத் நிஷா.

குத்தாலம் தாலுகா கழனிவாசல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசன். கடந்த சில ஆண்டுகளாக சிராவத் நிஷாவிற்கும், கவியரசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹாஜா நவாஸ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹாஜா நவாஸ் தனது மனைவி சிராவத் நிஷாவை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிராவத் நிஷா, கள்ளக்காதலன் கவியரசனுடன் சேர்ந்து ஹாஜா நவாசை, இரும்பு கம்பி மற்றும் உருட்டுக்கட்டைகளால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ஹாஜா நவாஸ் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஹாஜா நவாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சிராவத் நிஷா மற்றும் கவியரசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்