சுவாமிமலை அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

சுவாமிமலை அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Update: 2019-01-20 22:15 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் கடைத்தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன். இவருடைய மகன் சற்குருநாதன் (வயது34). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் சிறுமிக்கும், சற்குருநாதனுக்கு சுவாமிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நேற்று காலை நடைபெற இருந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த சமூக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சுகுணா, திருமண மண்டபத்துக்கு வந்து சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார். அப்போது திருமணம் செய்ய 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் இந்த சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் 20 நாட்கள் உள்ளன. எனவே திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றார். பின்னர் சிறுமியை அங்கிருந்து அழைத்து சென்று சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் இருவீட்டாரும் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியானதும் திருமணம் செய்து வைக்கிறோம் என போலீசாரிடம் எழுதி கொடுத்தனர். இதை தொடர்ந்து சிறுமியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்