தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Update: 2019-01-21 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் கல்யாணசுந்தரம், காசிநாதன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் பழனிசாமி, மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம், பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

போராட்டத்தில் பூதலூர் ஒன்றியம் வெண்டயம்பட்டி ஊராட்சியில் அரசு பணத்தை கூட்டு சதி செய்து கையாடல் செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்? ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு அரசு பணத்தை கொள்ளையடித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். கையாடல் செய்யப்பட்ட பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கலெக்டர் அண்ணாதுரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்கள், அரசு பணத்தை கையாடல் செய்தவர்கள் குறித்த விவரங்களை மனுவாகவும் அளித்தனர். இதையடுத்து கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டம் மதியம் 2.20 மணிக்கு முடித்துக் கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்