கன்னியாகுமரியில் கடல்வழி கடத்தல் தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை ரோந்து படகுகள் பழுதானதால் மீன்பிடி படகில் சென்றனர்

கன்னியாகுமரியில் கடல்வழி கடத்தலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. ரோந்து படகுகள் பழுதானதால் மீன்பிடி படகில் போலீசார் சென்றனர்.

Update: 2019-01-22 22:45 GMT
கன்னியாகுமரி,

மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பின்பு, அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க  கடலோர காவல்படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க ‘சஜாக்’ ஆபரே‌ஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடல் வழியாக கடத்தல், அகதிகளை படகுகளில் ஏற்றி செல்வது போன்றவற்றை தடுக்க நேற்று ஒத்திகை நடந்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சார்பில் கடல்வழி கடத்தல் தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை ஆரோக்கியபுரம் முதல், நீரோடி வரையிலான 48 கடற்கரை கிராமங்களில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை கிராமங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது.

கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் பயன்பாட்டிற்கு 4 அதிநவீன ரோந்து படகுகள் உள்ளன. இந்த படகுகளில் சென்றுதான் போலீசார் கடலில் ரோந்து வருவார்கள். தற்போது இந்த 4 படகுகளும் பழுதாகி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 மீன்பிடி படகுகளை ரோந்து பணிக்கு எடுத்து சென்றனர். ஒரு படகில் கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரையும், மற்றொரு படகில் சின்னமுட்டம் முதல் நீரோடி வரையும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்