புதுக்கோட்டை அருகே சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த தாய்-2 குழந்தைகள் பலி

புதுக்கோட்டை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-01-22 23:15 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தொட்டியபட்டியை சேர்ந்தவர் பழனிவேலு. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னுமணி (வயது 28). இவர்களுக்கு சஞ்சீவி (3) என்ற மகனும், சங்கவி (2) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி வீட்டில் பொன்னுமணி சமைத்து கொண்டிருந்தார். வீட்டிற்குள் 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து தீப்பற்றியது. இதில் பொன்னுமணியும் 2 குழந்தைகளும் பலத்த தீக்காயமடைந்தனர். மேலும் வீடும், அதில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீக்காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மீண்டும் மேல்சிகிச்சைக்காக அவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பொன்னுமணி உள்பட 3 பேரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கியாஸ் சிலிண்டர் விபத்தில் தாய் மற்றும் 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் இலுப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்