புயல் நிவாரண பொருட்களை கேட்டு கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

புயல்நிவாரணம் பொருட்களை கேட்டு கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-01-22 22:45 GMT
கந்தர்வக்கோட்டை,

கந்தர்வகோட்டை தாலுகாவை சேர்ந்த கோவிலூர், மட்டங்கால், மங்கனூர், கோத்துப்பனை, வழவம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து அரசு சார்பில் நிவாரண பொருட்கள், நிதி உதவி ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராமங்களில் வருவாய் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபடாததால், தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் ஏற்கனவே கிடைத்தவர்களுக்கே மீண்டும் நிவாரணம் பொருட்கள் மற்றும் நிதி உதவி தொகை கிடைக்கிறது எனக் கூறி பொதுமக்கள் தாலுகா அலுவலகஅதிகாரிகளிடம் கூற வந்த போது அங்கு ஊழியர்கள் வேலை நிறுத்த காரணமாக யாரும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கந்தர்வ கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தவர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்