பணகுடி அருகே நடந்த விபத்தில் காயமடைந்த நிலத்தரகரும் சாவு

பணகுடி அருகே நடந்த விபத்தில் காயமடைந்த நிலத்தரகரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-01-22 22:28 GMT
பணகுடி, 

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த பொன்னம்பலம் மகன் ஞானநிகேஸ் ஜெட்சன் (வயது 43). இவர் நாகர்கோவிலில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் பணகுடி அருகே காவல்கிணறில் புதிதாக இடம் வாங்குவதற்காக தனது காரில் அங்கு சென்றார். அப்போது அவருடன் நிலத்தரகரான பிள்ளையார்குடியிருப்பை சேர்ந்த மதன் (39) என்பவரையும் அழைத்து சென்றார்.

காவல்கிணறு நான்கு வழிச்சாலையில் காரை ஓரமாக நிறுத்தி விட்டு இருவரும் காருக்கு பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மினிலாரி இவர்கள் மீது மோதியது. இதில் டாக்டர் ஞானநிகேஸ் ஜெட்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதன் படுகாயமடைந்தார்.

பணகுடி போலீசார் மதனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் மதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பணகுடி போலீசார், தப்பியோடிய மினிலாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்