வேலப்பன்சாவடியில் லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி நண்பர் படுகாயம்

வேலப்பன்சாவடியில் லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-01-23 21:15 GMT
பூந்தமல்லி, 

சென்னை வண்ணாரப்பேட்டை, சிமென்டரி ரோடு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவருடைய மகன் அஸ்வின் டேனியல்குமார்(வயது 19). இவர், மதுரவாயலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பூந்தமல்லியை அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் ராகுல்(20). இவரும் அதே கல்லூரியில் அஸ்வின் டேனியல் குமாருடன் ஒன்றாக படித்து வருகிறார். நண்பர்களான இருவரும் நேற்று மதியம் ராகுல் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தனர்.

மோட்டார்சைக்கிளை அஸ்வின் டேனியல்குமார் ஓட்டினார். அவருக்கு பின்னால் ராகுல் அமர்ந்து இருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி அருகே 2 லாரிகளுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் இருவரும் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தனர்.

சாலையில் விழுந்த அஸ்வின் டேனியல்குமார் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதில் அவரது நண்பர் ராகுலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல்அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அஸ்வின் டேனியல்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ராகுலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்