காஞ்சீபுரத்தில் ஆட்டோ டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு 2 பேர் கைது

காஞ்சீபுரத்தில் ஆட்டோ டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-29 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் சதாவரத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் சின்ன காஞ்சீபுரம் பெருமாள் கோவில் வழியாக ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அப்போது, 2 பேர் ஆட்டோவை நிறுத்தி கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.600 -ஐ பறித்து கொண்டனர்.

இது குறித்து ஆட்டோ டிரைவர் டேவிட் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிர ண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஆட்டோ டிரைவர் டேவிட்டிடம் கத்திமுனையில் ரூ.600 பறித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் காஞ்சீபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த சூர்யா (21), அவரது நண்பரான முரசவாக்கம் கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன் என்கிற கோகுல் (20)என்பது தெரியவந்தது. சூர்யா மீது கொலை வழக்கு, அடி-தடி வழக்கு, உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது.

போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கத்தி, பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்