நீலகிரியில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - 8-ந் தேதி கடைசி நாள்

நீலகிரியில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க 8-ந் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

Update: 2019-01-30 23:00 GMT
ஊட்டி,

தமிழகத்தில் பணிக்கு செல்லும், சுய தொழில் செய்யும் மகளிர் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் என்ற மானியத்தில் இருசக்கர வாகனம் பெற அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் கிராம மற்றும் நகர்புறங்களில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் கடந்த ஆண்டு 1,074 பெண்கள் பயனடைந்து உள்ளனர். இந்த நிலையில் நடப்பாண்டிற்கு 1,074 பயனாளிகளை தேர்வு செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலோ அல்லது சுயமாகவோ தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். பயன்பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். பயனாளிகள் இருசக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் கொள்முதல் செய்யும் இருசக்கர வாகனங்கள் 1.1.2018-க்கு பின் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கும் பயனாளிகள் வயது வரம்பு சான்று, இருப்பிட சான்று, ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, பணிபுரிவதற்கான சான்று, சுய தொழில் புரிவதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வி சான்று(குறைந்தபட்ச தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி), புகைப்படம், விதவை, ஆதரவற்ற மகளிர், 35 வயதுக்கு மேல் திருமணமாகாத பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கான சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் உரிய அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, இருசக்கர வாகனத்திற்கான விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி உள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று, நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அதே அலுவலகங்களுக்கு அடுத்த(பிப்ரவரி) மாதம் 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்