கொள்முதல் நிலையங்களை திறக்காததால் நெல் மூட்டைகளை இரவு-பகலாக பாதுகாக்கும் அவலம்

சீர்காழி பகுதியில் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் நெல் மூட்டைகளை இரவு-பகலாக பாதுகாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-01-30 22:45 GMT
சீர்காழி,

சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, புங்கனூர், கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், கன்னியாகுடி, கற்கோவில், அத்தியூர், திட்டை, தில்லைவிடங்கன், காரைமேடு, எடகுடிவடபாதி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சம்பா நெற்பயிர் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு கிராமங்களில் போதிய அறுவடை எந்திரம் கிடைக்காததால் அறுவடை செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உரிய நேரத்தில் விளைந்த நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக அந்தந்த ஊராட்சிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். ஆனால், பல்வேறு ஊராட்சிகளில் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள், கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ள தங்களது நெல் மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடி இரவு-பகலாக பாதுகாத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, சீர்காழி பகுதியில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங் களையும் உடனே திறந்து நெல் மூட்டைகளை கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்