ராதாபுரம் அருகே மனைவி- மாமியார் விஷம் குடித்து தற்கொலை 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 12 பேர் மீது வழக்கு

ராதாபுரம் அருகே தி.மு.க. பிரமுகர் 2-வது திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த மனைவி-மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக, கணவர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-01-31 23:00 GMT
ராதாபுரம்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சியை சேர்ந்தவர் மாயராமன் (வயது 37). தி.மு.க. ஊராட்சி கிளை செயலாளர். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணன்-பொன்னம்மாள் (58) தம்பதியின் மகள் வைரமுத்துவுக்கும் (34) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வைரமுத்து அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார்.

மாயராமன்-வைரமுத்து தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் மாயராமன் அடிக்கடி மனைவியிடம் இதுகுறித்து தகராறு செய்து வந்துள்ளார். குழந்தை இல்லாததால் 2-வது திருமணம் செய்யப்போவதாக அவர் கூறி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 28-ந் தேதி உடன்குடி பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை மாயராமன் 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தனது திருமண புகைப்படத்தை முகநூல் மற்றும் ‘வாட்ஸ்-அப்’பிலும் அவர் வெளியிட்டார். அன்று முதல் அவர் வீட்டுக்கும் வரவில்லை.

இதையடுத்து வைரமுத்துவும், அவரது தாயாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக தங்களுக்கு நியாயம் கோரி, அவர்கள் ராதாபுரம் போலீசில் புகார் மனு கொடுக்க சென்றனர். அங்கு மனுவை வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். விரக்தியில் இருந்த அவர்கள் இரவு வீட்டில் விஷத்தை குடித்து விட்டு தூங்கி விட்டனர்.

நேற்று அவர்களது வீடு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது தாயும், மகளும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ராதாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அவர்களின் உறவினர்கள் ராதாபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். 2 பேரின் சாவுக்கு காரணமான மாயராமன் உள்ளிட்டோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து வைரமுத்துவின் கணவர் மாயராமன் உள்பட 12 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. பிரமுகர் 2-வது திருமணம் செய்ததால், அவருடைய மனைவி-மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்