வேலை கிடைக்காததால் விரக்தி: தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் எம்.டெக் பட்டம் பெற்ற என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-01-31 22:13 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் ஜி.என்.பாளையம் எழில்நகரைச் சேர்ந்தவர் தமிழரசன். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுடைய மகன் கோபிநாத் (வயது 23), புதுச்சேரி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.டெக். படித்துள்ளார். பட்டப்படிப்பில் இவர் தங்கப்பதக்கம் வென்றவர்.

கடந்த சில மாதங்களாக கோபிநாத் வேலை தேடி வந்தார். ஆனால் அவருடைய படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால் அவர் விரக்தி அடைந்தார். அதை அறிந்த அவருடைய பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கோபிநாத்தின் தந்தை தமிழரசன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம் தாய் காமாட்சி வெளியில் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோபிநாத், வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் விரைந்து வந்து கோபிநாத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்