தூத்துக்குடி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் பணியிடை நீக்கம்

தூத்துக்குடியில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-02-01 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சி.வ.மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு முதுகலை பட்டதாரி ஆசிரியராக தூத்துக்குடியை சேர்ந்த பொன்ராஜ் (வயது 51) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகேசனிடம் புகார் அளித்தனர். இதுபற்றி அவர் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இருதரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணை தொடர்பான அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. அதில் ஆசிரியர் பொன்ராஜ் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகேசன் அந்த அறிக்கையை பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொன்ராஜை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்