படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-02 22:30 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.

இதற்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்த பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 31.3.19 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.3.19 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

மேலும் உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் வருகிற 28–ந் தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்