6-ந் தேதி திறப்பு விழா: நாராயணசாமி நாயுடு மணி மண்டபத்தில் அமைச்சர் ஆய்வு

நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். இந்த மணிமண்டபம் வருகிற 6-ந் தேதி திறக்கப்படுகிறது.

Update: 2019-02-02 21:45 GMT
கோவை,

கோவையை அடுத்த வையம்பாளையத்தில் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதை வருகிற 6-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதையொட்டி விழா நடக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வி.சி. ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:- விவசாயிகளின் நலனுக்காக போராடிய நாராயணசாமி நாயுடுவுக்கு கோவையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜயதுரை, தேவம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுந்தரி, லதா, முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராம், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஜி.சுப்பிரமணியம், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் எஸ்.ஆர்.அர்ஜுனன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் புருஷோத்தமன், சுகுமார், நாராயணசாமி நாயுடுவின் பேரன் இஸ்கான் பிரபு மற்றும் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்