முத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடல் புதைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

முத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடலை புதைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-04 22:15 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, பேட்டை, கற்பகநாதர்குளம் உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் ஜாம்புவானோடை மீனவ கிராமத்தில் இருந்து அலையாத்திக்காட்டுக்கு செல்லும் பாதையில் கோரையாற்றுக்கு நடுவில் நடுத்திட்டு என்ற மணல் திட்டு உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த மணல் திட்டில் தங்கி ஓய்வெடுத்து விட்டு மீன்பிடிக்க செல்வது வழக்கம். நேற்று நடுத்திட்டு பகுதிக்கு சில மீனவர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள மணற்பாங்கான இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மண்ணில் பாதி அளவு உடல் புதைந்த நிலையில் தலை மற்றும் கால்கள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் பிணம் புதைந்திருந்தது. பிணத்தை சுற்றி ரத்தக்கறையும் இருந்தது. பிணம் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவிலும் மணற்பகுதியில் ரத்தக்கறை படிந்திருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்து உடலை மணல்திட்டில் புதைத்திருப்பது தெரிய வந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் வீட்டில் இருந்து வெளியேறி நடுத்திட்டு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தார். அவரை கடந்த 15 நாட்களாக காணவில்லை. எனவே கொலை செய்யப்பட்ட வாலிபர், மாயமான மீனவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்