செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்ய ஏற்பாடு - அதிகாரிகள் விசாரணை

செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2019-02-05 23:15 GMT
செய்யாறு,

செய்யாறு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய அவருடைய பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி அரக்கோணம் தாலுகா நெமிலி கிராமத்தை சேர்ந்த உறவினர் மகன் ராமச்சந்திரன்(25) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடத்தி உள்ளனர். அப்போது வருகிற 11-ந்தேதி அரக்கோணத்தில் திருமணம் நடத்த தேதி குறித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவி, தனக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்வதாக பள்ளி தோழிகளிடம் கூறியிருக்கிறார். உடனடியாக இதுபற்றி மாணவிகள், கட்டணமில்லா தொலைபேசி மூலம், சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அனக்காவூர் சமூக நல அலுவலர் தாரகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். பின்னர் அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்த சென்றபோது அவர்கள், தங்கள் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்க சென்றுவிட்டனர். இதனால் அவர்களை அதிகாரிகள் சந்திக்க முடியாமல் சென்றுவிட்டனர். எனவே பள்ளி மாணவிக்கு நடக்க இருக்கும் கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று மாணவியின் தோழிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்