தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 61 பவுன் நகை, பணம் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை

மணவாளக்குறிச்சி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 61 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2019-02-06 23:00 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே வருக்கத்தட்டு பகுதியை சேர்ந்தவர் அருணைநாதன் (வயது 50). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். மல்லிகாவின் தாய் வீடு அருகில் உள்ள உரப்பனவிளை பகுதியில் உள்ளது. தாய்க்கு தினமும் மல்லிகா உணவு கொண்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் சம்பவத்தன்று மல்லிகா வழக்கம் போல் தாய்க்கு உணவு கொண்டு செல்ல உரப்பனவிளைக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 61 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். வீடு திரும்பிய மல்லிகா கொள்ளை போனதை கண்டு திடுக்கிட்டார். கொள்ளை போன நகைகள் அனைத்தும் மகள் திருமணத்துக்கு வாங்கிய நகைகள் என்று மல்லிகா கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்