புதுச்சத்திரம் அருகே வங்கி காசாளர் மர்ம சாவு

புதுச்சத்திரம் அருகே வங்கி காசாளர் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2019-02-08 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் ராசிபுரம் அருகே தொப்பப்பட்டி ஜேடர்பாளையத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

சம்பவத்தன்று பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய முருகேசன் இரவில் தனது அறையில் படுத்து தூங்கினார். நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரம் ஆகியும் முருகேசன் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அவர் கட்டிலில் படுத்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முருகேசன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்