தேனி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

தேனி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-02-08 22:30 GMT
தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி தந்தைபெரியார் 1-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி (வயது 34). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. எனவே பிரியதர்ஷினி கணவரை பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தாயார் வசந்தாவுடன் வசித்து வந்தார். அவர் தனக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தை வெளிப்படுத்தி அடிக்கடி வீட்டில் அழுது புலம்பியபடி இருந்துள்ளார். அவரை, தாயார் வசந்தா சமாதானம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியதர்ஷினி தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று இருந்த அவருடைய தாயார் வசந்தா வீடு திரும்பியபோது, மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வசந்தா கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்