காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு போலீசார் விசாரணை

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-10 22:30 GMT

காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் மாதையன் (வயது 33). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி உமா என்ற மனைவியும், ஸ்ரீதேவி(10), மீனா(8) ஆகிய 2 மகள்களும், மணி(5) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது சொந்த வேலையாக மாதையன் அனுமந்தபுரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அங்கு வேலைகளை முடித்து கொண்டு மாதையன் மீண்டும் ஊருக்கு திரும்பினார். அப்போது கெட்டூர் பாலம் அருகே சென்ற போது காரிமங்கலத்தில் இருந்து அனுமந்தபுரம் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாதையன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று இறந்த மாதையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்