நெய்யப்படாத கைப்பைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் விஜயலட்சுமி அறிவுறுத்தல்

நெய்யப்படாத கைப்பைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.

Update: 2019-02-10 22:45 GMT
அரியலூர், 

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அதில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அளவிலான தடையை அரசு அறிவித்தது, அதில் பாலிப்புரப்பிலீன் மற்றும் பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் பைகளும் (தடிமன் வேறுபாடின்றி) அடங்கும். பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால், அதன் இயல்புகளை நன்கு அறிந்தனர். அதே சமயத்தில் பாலிப்புரப்பிலீன் பைகள் (நெய்யப்படாத கைப்பைகள்), அமைப்பு, வண்ணம் மற்றும் இயல்பில் துணிப்பைகள் போலவே இருப்பதால் மக்கள் துணிப்பை என தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

பரவலாக...

மேலும் இவ்வகை நெய்யப்படாத பைகளின் கூறு சி.ஐ.பி.இ.டி. ஆல் பாலிப்புரப்பிலீன் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நெய்யப்படாத கைப்பைகளும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளே ஆகும். கடந்த ஆங்கில புத்தாண்டு முதல் தமிழகம் தனது பயணத்தை “பிளாஸ்டிக் மாசில்லா” மாநிலமாக தொடங்கப்பட்டிருந்தாலும், இவ்வகை நெய்யப்படாத கைப்பைகள் இனிப்பங்காடி, மருந்தகம், உணவகம், துணி கடைகளில் துணிப்பைகள் என தவறாக கருதப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இது போன்ற கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல், துணி மற்றும் காகித பைகளை பொதுமக்கள் உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்