மடத்துக்குளம் அருகே தஞ்சமடைந்துள்ள சின்னதம்பி யானையை பிடிப்பதா? விரட்டுவதா?

மடத்துக்குளம் அருகே தஞ்சமடைந்துள்ள சின்னதம்பி யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதா? அல்லது வனப்பகுதிக்குள் விரட்டுவதா? என்று அரசின் உத்தரவுக்காக வனத்துறையினர் காத்திருக்கிறார்கள்.

Update: 2019-02-10 22:30 GMT
மடத்துக்குளம்,

கோவை சின்னத்தடாகம் பகுதியில் இருந்து டாப்சிலிப் பகுதிக்கு காடு கடத்தப்பட்ட சின்னதம்பி என்ற காட்டுயானை மடத்துக்குளம் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது. அந்த யானை, 4 நாட்களாக மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடி புத்தூர் பகுதியில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிகிறது.இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் தோட்டத்துக்குள் இருந்து வெளியே வந்த சின்னதம்பி யானை சுமார் ஒரு மணி நேரம் அங்கும் இங்கும் உலாவியபடி இருந்தது.

தொடர்ந்து இரவு நேரத்திலும் வனத்துறையினர் மற்றும் போலீசார் சின்னதம்பி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வனத்துறையினருக்கு உதவியாக கும்கி யானை ‘கலீம்’, ‘சுயம்பு’ ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது. சின்னதம்பி யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதா? அல்லது வனப்பகுதிக்குள் விரட்டுவதா? என்று அரசின் உத்தரவுக்காக வனத்துறையினர் காத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று வனத்துறையினர் கூறினார்கள்.சின்னதம்பி யானை இருக்கும் இடத்திற்கு 200 மீட்டர் தொலைவில், கும்கி யானை ‘கலீம்’ நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கும்கி யானை ‘மாரியப்பன்’ காட்டு யானையை பார்த்து ஓடியது. இதனால் அது கோவை டாப்சிலிப் பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று காலை டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானை ‘சுயம்பு’ கண்ணாடிப்புத்தூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்