மேல்மலையனூர் அருகே, வேன் மோதி விவசாயி பலி

மேல்மலையனூர் அருகே வேன் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-02-11 23:00 GMT
மேல்மலையனூர்,

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் வேலு (வயது 48), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மேல்மலையனூர் அடுத்த கூடுவாம்பூண்டியில் உள்ள உறவினர் ஒருவரை பார்க்க வந்தார். பின்னர் அவர் தனது உறவினரை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தம் நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சேத்துப்பட்டில் இருந்து செஞ்சி நோக்கி வந்த வேன் ஒன்று, வேலு மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்