வேதாரண்யம் அருகே கிராம உதவியாளருக்கு கொலை மிரட்டல் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்கு

வேதாரண்யம் அருகே கிராம உதவியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-11 22:15 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தில் கிராம உதவியாளராக பணி புரிந்து வருபவர் ராமராஜன்(வயது29). அதே ஊரை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவர் ஆலத்தம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராமராஜன் கிராம நிர்வாக அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வெற்றிச்செல்வன், மருதூர் வடக்கு சேத்தியை சேர்ந்த ராமசந்திரன் உள்பட 4 பேர் வந்து ராமராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

4 பேர் மீது வழக்கு

இதுகுறித்து கிராம உதவியாளர் ராமராஜன் கரியாப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வெற்றிச்செல்வன், ராமசந்திரன் உள்பட 4 பேர் மீது போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்