மண்ணச்சநல்லூர் அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலி

மண்ணச்சநல்லூர் அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கியதில் தலை துண்டாகி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-11 23:00 GMT
சமயபுரம், 

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையம் மேலூரை சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மனைவி சித்ரா(வயது 32). இருவரும் கூலி தொழிலாளிகள். நேற்று முன்தினம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேலசீதேவிமங்கலத்திற்கு நெல் அறுவடை செய்யும் வேலைக்காக சித்ரா சென்றிருந்தார்.

அங்கு நெல் அறுவடை எந்திரம் அருகே வேலை செய்தபோது, எதிர்பாராதவிதமாக அவருடைய சேலை எந்திரத்தில் சிக்கியது. அவர் சேலையை எடுக்க முயன்றபோது, எந்திரத்தில் சிக்கி அவருடைய தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் வேலை பார்த்தவர்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார், அங்கு வந்து சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவர் திருப்பைஞ்சீலி அருகே உள்ள மூவானூர் மேலூரை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் ராதாகிருஷ்ணனை(29) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூலி வேலைக்கு சென்ற பெண் எந்திரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்