மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு மக்கள் மனு

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Update: 2019-02-11 22:45 GMT
அரியலூர், 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம் தொழில் தொடங்க கடனுதவி, வீட்டு மனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 322 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில் குணமங்கலம், கடம்பூர், மதுரா ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமங்களில் இருளர் மக்கள் 63 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்களுக்கு வீட்டு மனைவரி பட்டா வழங்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே கலெக்டர் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேற்கண்ட கிராமத்தில் வசிக்கும் இருளர் மக்களுக்கு இலவச வீட்டு மனைவரி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதேபோல் பலர் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட சத்தியநாராயணன் அதனை உரிய அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பரிதாபானு, பாலாஜி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்