மாவட்டத்தில் உள்ள சிறு,குறு விவசாயிகள் ரூ.6,000 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் ரூ.6,000 ஊக்கத்தொகை பெற கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-12 22:45 GMT
உத்தமபாளையம்,

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி சிறு, குறு விவசாயிகளுக்கு வருடந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.6,000 வழங்க முடிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், போடி ஆகிய 5 தாலுகாக்கள் உள்ளது. இதில் வசிக்கும் சிறு, குறு விவசாயிகள் ஊக்கத்தொகை பெற சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கலாம். அந்த மனுவுடன் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் நகல், கம்ப்யூட்டர் பதிவில் பெறப்பட்ட சிட்டா ஆகிய நகல் இணைக்க வேண்டும்.

இந்த ஊக்கத்தொகை பெற விவசாயிகள் தாமதம் இன்றி விண்ணப்பிக்கவேண்டும். மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களில் தினந்தோறும் எவ்வளவு விவசாயிகள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பதை மாலையில் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று தாசில்தார்களுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஊக்கத்தொகை பெற வரும் விவசாயிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் அலைகழிப்பு செய்யகூடாது. விவசாயிகள் கேட்கும் சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிக்கவேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து உத்தமபாளையம் தாசில்தார் உதயராணியிடம் கேட்டபோது, உத்தமபாளையம் தாலுகாவை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

தினந்தோறும் பெறப்படும் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பதிவு ஏற்றம் செய்யப்பட்டு தகுதியான விவசாயிகளை தேர்வு செய்து அவர்களது வங்கி கணக்கில் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை வரவு செய்யப்படும். எனவே விவசாயிகள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்து பயன்பெற வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்துள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்