தென்காசி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் நெல், தென்னை மரங்கள் சேதம்

தென்காசி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் நெல், தென்னை, வாழை மரங்கள் சேதமடைந்தன.

Update: 2019-02-12 22:00 GMT
தென்காசி, 

தென்காசி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் நெல், தென்னை, வாழை மரங்கள் சேதமடைந்தன.

யானைகள் அட்டகாசம்

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பகுதியில் கடந்த வாரம் காட்டு யானைகள் புகுந்தன. அவை அங்கு பயிரிட்டு இருந்த தென்னை, நெற்பயிர்களை சேதப்படுத்தின. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. அவை மத்தளம்பாறையை சேர்ந்த அருணாச்சலம், சேதுராமன், பொன்னையா, இசக்கி, வேலாயுதம் ஆகியோருக்கு சொந்தமான வயல்களில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்களையும், தென்னை, வாழை மரங்களையும் சேதப்படுத்திவிட்டு காட்டுக்குள் சென்று விட்டன.

வனத்துறையினர் ஆய்வு

இதில் 132 தென்னை மரங்களும், 8 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள், 3 ஏக்கரில் பயிரிட்டு இருந்த நெற்பயிர்களும் சேதமடைந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றாலம் வனவர் பாண்டியராஜ், வனக்காவலர் வனராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் மாடசாமி, ராஜு, சிவா ஆகியோர் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள் இரவில் யானைகளை விரட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்