சாயல்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 ஜே.சி.பி. எந்திரங்கள் பறிமுதல்

சாயல்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 ஜே.சி.பி. எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-02-12 22:30 GMT
சாயல்குடி,

சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை கிராமத்தில் சவடு மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் வெளியிடங்களுக்கு கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கடலாடி தாசில்தார் முத்துலட்சுமி, துணை தாசில்தார் செந்தில் வேல்முருகன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்து அப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்தனர்.

இந்த நிலையில் பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு இரவு பகலாக மணல் திருட்டு நடைபெறுவதை கண்டறிந்தார். இதையடுத்து மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட 5 ஜேசிபி எந்திரங்களை அவர் பறிமுதல் செய்தார். அப்போது சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா, வருவாய் ஆய்வாளர் மாலதி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்