ராமேசுவரம் அருகே நடுக்கடலில் கடல் கொந்தளிப்பால் படகு மூழ்கியது 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

ராமேசுவரத்தில் நடுக்கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக படகு மூழ்கியது. அதில் இருந்த 4 பேரை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

Update: 2019-02-12 22:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 537 படகுகளில் 3000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு அதிகாலை நேரத்தில் கரை திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென கடும் சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதில் ராமேசுவரம் முனியராஜ் என்பவருக்கு சொந்தமான படகு அலையில் சிக்கி பலகை உடைந்து கடலில் மூழ்கியது. அந்த படகில் இருந்த மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்த குணசேகரன்(வயது 45), களஞ்சியராஜா(36) உச்சிப்புளியை சேர்ந்த காமராஜ் (52), கீழக்கரையை சேர்ந்த கார்த்திகைசாமி(52) ஆகியோர் கூச்சலிட்டனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் வந்து கொண்டிருந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான படகில் வந்தவர்கள் கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். படகு கடலுக்குள் மூழ்கிய சம்பவம் குறித்து மீன்துறை அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து படகை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்