கடலூர் முதுநகரில், வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து தர்ணா

கடலூர் முதுநகரில், வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைக்கு ‘சீல்’ வைக்க முயன்ற அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-12 23:00 GMT
கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகரில் பக்தவச்சலம் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு நகராட்சிக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் நகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைகளின் மாத வாடகையை சுமார் 10 மடங்காகவும், ஓராண்டு வாடகையை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்றும் நகராட்சி சார்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பக்தவச்சலம் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் உயர்த்தப்பட்ட வாடகையை திரும்ப பெறக்கோரி நேற்று காலையில் தங்களது கடைகளை பூட்டி கடைகளின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே அங்கு வந்த நகராட்சி வருவாய் அதிகாரி சுகந்தி, நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, நகர அமைப்பு அதிகாரி தயாநிதி உள்ளிட்ட அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது வியாபாரிகள் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீங்கள் வாடகையை உயர்த்தி கேட்பதும், ‘சீல்’ வைக்க முயற்சிப்பதும் நியாயமில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ஒரு கடைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு ‘சீல்’ வைக்க முயன்றனர்.

இதற்கிடையே சீல் வைக்க முயன்ற கடையின் பூட்டை உடைத்து வியாபாரிகள் உள்ளே சென்றனர். தொடர்ந்து வியாபாரிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் சத்தியன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என்றனர். இதனை தொடர்ந்து வியாபாரிகள், கலைந்து சென்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான வாடகை தொகையை அனைத்து கடை உரிமையாளர்களும் 15 சதவீதம் அதிகப்படுத்தி ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவை அடங்கிய தொகையை வரவோலையாக எடுத்து நகராட்சிக்கு அனுப்பி விட்டோம். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றனர். 

மேலும் செய்திகள்