நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது என்று குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சி.என்.ராஜதுரை தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-13 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக ஆக்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது.

அதேபோல் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அற்புதமான ஒரு நிதிநிலை பட்ஜெட்டை துணை முதல்–அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் 36 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.980 கோடியில் புதிய வீடுகள், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளுக்கு சுமார் ரூ.255 கோடி, கூடுதல் அம்சங்களுடன் ரூ.250 கோடியில் உழவர் பாதுகாப்பு திட்டம், விவசாயத்திற்கென ரூ.10 ஆயிரம் கோடி, சென்னையில் ஆயிரக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை நிறுத்த மிக பிரமாண்டமான வளாகம் போன்ற பல்வேறு திட்டங்கள் இடம் பெற்று உள்ளன.

புதிதாக மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் ஓர் அற்புதமான திட்டமாகும். கடந்த 8 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமையும், சிறப்பும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரியது. அரசு மருத்துவமனை மூலம் கிடைக்கும் மருத்துவ வசதிகள் ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது மருத்துவ வசதிக்காக ஏங்கி தவிக்கும் எண்ணற்ற ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த நிதிநிலை பட்ஜெட்டை, எதிர்க்கட்சி தலைவர் உதவாக்கரை பட்ஜெட் என்று வர்ணித்திருப்பது அவரது தாழ்வு மனப்பான்மையையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்