பதிவு செய்யாமல் இயங்கும் மகளிர் விடுதிகள் மூடப்படும் - கலெக்டர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் மகளிர் விடுதிகள் மூடப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-02-13 22:45 GMT
விழுப்புரம், 

அலுவலகங்களில் பணிபுரியும் மகளிர்கள் தங்கி வரும் விடுதிகளை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்களுக்கான சட்டத்தின் கீழ் வருகிற 28-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகளை மேற்கண்ட சட்டத்தின் கீழ் 28-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய உரிய சான்றுகளுடன் தங்கள் விடுதிகளின் கருத்துருக்களை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு விடுதிகள் பதிவு செய்யாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் அந்த விடுதிகளை மூட நடவடிக்கை எடுப்பதோடு அதன் உரிமையாளர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்