மதுகுடித்ததை கண்டித்ததால் தகராறு, வடமாநில வாலிபர் குத்திக்கொலை

மது குடித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபரை கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-13 22:45 GMT
வானூர்,

சின்னகோட்டக்குப்பத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தனியார் விருந்தினர் இல்லம் உள்ளது. இங்கு நீச்சல் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் விபின் சர்க்கார் (வயது 47), அவருடைய உறவினர் கிரண் பிஸ்வாஸ் (35) உள்பட பலர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

உறவினர்களான விபின் சர்க்கார், கிரண் பிஸ்வாஸ் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். கிரண் பிஸ்வாஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவது வழக்கம். இது பிடிக்காத விபின் சர்க்கார், கிரண் பிஸ்வாசை கண்டித்தார். இருப்பினும் மது குடிக்கும் பழக்கத்தை அவர் விடவில்லை.

நேற்று முன்தினமும் கிரண் பிஸ்வாஸ் மதுகுடித்துவிட்டு அறைக்கு வந்தார். இதுபற்றி விபின் சர்க்கார் கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விபின் சர்க்கார் அறையில் இருந்த கத்தியை எடுத்து கிரண் பிஸ்வாசை சரமாரியாக குத்தினார். இதில் முகம் மற்றும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிரண் பிஸ்வாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கிரண் பிஸ்வாஸ் பிணத்தின் அருகே அமர்ந்து, அவரை உறவினர் என பாராமல் நானே கொலை செய்து விட்டேனே என கதறி அழுது கொண்டிருந்த விபின்சர்க்காரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்